ஓமந்தை பகுதியில் வீதி விபத்து: பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் பலி
வவுனியா, ஓமந்தை – ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சோககரமான வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே, கூலர் (குளிரூட்டப்பட்ட) வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களும் உயிரிழப்புகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இன்னும் எத்தனை உயிர்களை வீதி விபத்துக்களுக்கு பலி கொடுக்கப் போகிறோமோ? என அப்பகுதி மக்கள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க