சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குஞ்சுக்கால் வெளியில் உப்பளம் அமைக்க முயற்சி நிறுத்திவைக்க நடவடிக்கை!

குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்கள் உப்பளம் அமைக்க முயற்சிக்கும் தமிழர்களின் பூர்வீக்காணிகளை மீட்டுத்தர ரவிகரன் எம்.பி வலியுறுத்து; பிரச்சினைக்கு தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்திவைக்க நடவடிக்கை – மாவட்டசெயலர் தெரிவிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய தமிழ் மக்களிடமே கையளிக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கிராமமக்களால் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், காணி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எழுத்துமூலக் கோரிக்கை மற்றும் காணி ஆவணங்களின் பிரதியைப் பெற்றுக்கொண்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் முயற்சிகளை நிறுத்திவைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தம்மால் கடிதம் அனுப்பப்படுமெனவும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்தப்பகுதியில் எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அனுமதிக்கவேண்டாமென பொலிசாருக்கும் கடிதம் அனுப்பப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் சட்டவிரோதமாக பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளால் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு தீர்வுகாணுவது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 27.02.2026இன்று இடம்பெற்ற கலந்துரையாடலியே மேற்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் முயற்சியொன்று 27.02.2026இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குத்தொடுவாய்ப் பகுதி தமிழ் மக்கள், சட்டவிரோதமாக உப்பளம் அமைக்க முற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 27.02.2026 மாலை 03.00மணிக்கு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சட்டவிரோதமாக உப்பளம் அமைப்பதற்கு முயற்சித்த தரப்பினர் ஆகியோர் வருகைதரவில்லை.

இந்நிலையில் குறித்தகூட்டத்தில் குஞ்சுக்கால்வெளிப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு தாம் தமது இடங்களிலிருந்து இடம்பெயரும்வரையில் பயிற்செய்கையில் ஈடுபட்டுவந்த தமக்குரிய தனியார் அறுதி உறுதிக் காணிகள், 2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பிற்பாடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயத்திற்குரிய காணிகள் எனக் கூறப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனாலும் இதன்போது மாவட்டசெயலாளரிடம் முறையீடுசெய்யப்பட்டது.

அத்தோடு இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமது பயிற்செய்கைக் காணிகளில் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு சட்டநடவடிக்கை மேற்கொண்டதாகவும் இதன்போது மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இத்தகையசூழலில் குஞ்சுக்கால் வெளியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது அறுதி உறுதிக் காணிகளில் தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் உப்பளம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது வனஜீவராசிகள் திணைக்களம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய் மக்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களாலும் இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் முறையிடப்பட்டது.

எனவே குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமது பூர்வீக அறுதி உறுதி பயிர்ச்செய்கைக் காணிகளை தமக்கு மீட்டுத்தருமாறு இதன்போது மாவட்டசெயலாளரிடம் காணிக்குரிய மக்களால் தமது காணி ஆவணங்களுடன் கோரிக்கைக் கடிதங்களும் கையளிக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

குஞ்சுக்கால்வெளியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக அறுதி உறுதி பயிற்செய்கைக்காணிகள் மீட்கப்பட்டு அவர்களிடமே கையளிக்கப்படவேண்டும்.

வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் அங்கு பயிற்செய்கை மேற்கொள்ள பலதடவைகள் முயற்சிகளை மேற்கொண்டபோது அவர்களை கைது செய்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

ஆனால் இங்கு அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக உப்பளம் அமைக்க முயற்சிமேற்கொள்ளப்பட்டமை மற்றும் மரங்களை வெட்டி அங்கு குடிசை அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் சட்ட நடவடிக்கைகள் எதுவும் அவர்களுக்கெதிராக இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மேலும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக அதிகாரப் பரப்பிற்குட்பட்ட பகுதிகளுக்குள் மகாவலி அதிகாரசபையோ, வெலிஓயா பிரதேசசெயலகமோ அத்துமீறிய அனுமதிகளை வழங்கமுடியாதெனவும் அவர்கள் ஆதிக்கங்களைச் செலுத்தமுடியாதெனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்தபகுதியில் உப்பளம் அமைப்பதற்கு கடந்த 2022ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஆனால் நிபந்தனையுடன் கூடிய அனுமதியாகவே அந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது. குறிப்பாக சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படவேண்டுமென்ற நிபந்தனையுடன் கூடிய அனுமதியாகவே வழங்கப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

தற்போது குறித்த குஞ்சுக்கால் வெளி பகுதியில் உப்பளம் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரா குறித்த பகுதியில் உப்பளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதென வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலரிடம் கேட்டிருந்தேன்.

சுற்றுப்புறச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக குறித்த உப்பளம் அமைக்க முயற்சிக்கும் தரப்பு கூறுவதாகவும், எனினும் அவ்வாறு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டமைக்கான எந்த ஆவணங்களும் அவர்களால் தமக்கு காண்பிக்கப்படவில்லை எனவும் வனஜீவராசிகள் திணைக்கள பிராந்திய அலுவலர் தம்மிடம் தெரிவித்ததாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மேலும் இதன்போது தெரிவித்தார்.

இதுதவிர முன்னாள் வெலிஓயா பிரதேசசெயலாளராலும் குஞ்சுக்கால்வெளி பகுதியில் உப்பளம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.

இத்தகைய சூழலில்தான் இந்தக்காணிகள் உங்களுடைய அறுதி உறுதிக் காணிகள் எனத் தெரிவித்து குறித்த காணிகளை மீட்டுத்தருமாறு கோரிக்கைக் கடிதங்களையும், காணிகளுடைய ஆவணங்களையும் என்னிடம் சமர்ப்பித்துள்ளீர்கள்.

இந்தக் காணிகள் தனியார் காணிகளாக இருந்தால், அந்தக்காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தால் அனுமதி வழங்க முடியாது. அவ்வாறு தனியார் காணிகளுக்கு இவ்வாறு உப்பளம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பின் அது பிழையான நடவடிக்கையாகவே கருதப்படும்.

இவ்வாறு குஞ்சுக்கால்வெளி பகுதியில் உப்பளம் அமைக்கப்பட முயற்சிமேற்கொள்ளப்படும் காணிகள் தனியார் காணிகள் எனவும் அந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்களால் கோரிக்கைக்கடிதத்துடன் காணிகளுக்குரிய ஆவணங்களும் எமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் முயற்சிகளை நிறுத்திவைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தம்மால் கடிதம் அனுப்பப்படும் என இதன்போது மாவட்டசெயலாளர் தெரிவித்தார்.

அத்தோடு இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்தப்பகுதியில் எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அனுமதிக்கவேண்டாமென பொலிசாருக்கும் கடிதம் அனுப்பப்படுமெனவும் மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment