குஞ்சுக்கால் வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களின் சட்டவிரோத உப்பளம்
குஞ்சுக்கால் வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களின் சட்டவிரோத உப்பளம் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார் ரவிகரன் எம்.பி; மாலை 03.00மணிக்கு முல்லை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் முயற்சியொன்று 27.02.2026இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குத்தொடுவாய்ப் பகுதி தமிழ் மக்கள், சட்டவிரோதமாக உப்பளம் அமைக்க முற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 27.02.2026இன்று மாலை 03.00மணிக்கு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளில், உப்பளம் அமைப்பதற்கு கடந்த 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டமொன்றில் பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த சிலரால் அனுமதி கோரப்பட்டிருந்தது. தமிழ் மக்களுக்குரிய பூர்வீக விவசாயக்காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாதென இதன்போது வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாதென குறித்த முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிற்பாடும், பெரும்பான்மை இனத்தவர்கள் சிலரால் குறித்த குஞ்சுக்கால்வெளி பகுதியில் உப்பளம் அமைப்பதற்கான சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினரால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு குஞ்சுக்கால்வெளி பகுதியில் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கப்படுவதுதொடர்பில் கடந்த 23.02.2026அன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கொக்குத் தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனை நேரடியாகச் சந்தித்து அவரிடம் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் குறித்த சட்டவிரோத செயற்பாட்டை தடுப்பதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென இதன்போது முல்லைத்தீவு மாவட்டசெயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தொடர்ந்தும் குஞ்சுக்கால்வெளி பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவந்தநிலையில், இவ்விடயம் தொடர்பில் கவனஞ்செலுத்துமாறு கடந்த 25.02.2026அன்று வடக்கு மாகாண அளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதுடன், கடந்த 26.02.2026அன்று முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவிடமும் நேரடியாக கடிதமொன்று கையளிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்நடவடிக்கையினையடுத்து, கடந்த 26.02.2026ஆம் திகதியன்று குஞ்சுக்கால்வெளியில் இடம்பெறும் சட்டவிரோத சட்டவிரோத உப்பளம் அமைக்கும் செயற்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கடிதத்தின்மூலம் வரியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 26.02.2026அன்றும் குஞ்சுக்கால் வெளிபகுதியில் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் முயற்சியில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஈடுபட்டிருந்தபோது வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் கொக்கிளாய் பொலிசார் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இருப்பினும் அத்தோடு தமது சட்டவிரோத செயற்பாட்டை நிறுத்தாத பெரும்பான்மையினத்தவர்கள் தொடர்ந்தும் 27.02.2026இன்றும் குஞ்சுக்கால்வெளி பகுதியில் உப்பளம் அமைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினரால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்த மக்களுடன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நிலமைகளைப் பார்வையிட்டார். அப்போது அங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் குழிகள் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் இவ்வாறு அங்கு சட்டவிரோதமாக குழிகள் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அதனை ஏற்கமறுத்த பெரும்பான்மை இனத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரையும், அங்கு சென்ற மக்களையும் காணொளி எடுத்ததுடன், அச்சுறுத்துகின்ற விதமாக செயற்பட்டனர்.
எனினும் குறித்த இடத்தில் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாதெனத் தெரிவித்து மக்களுடன் அப்பகுதியில் அமர்ந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதிக்கு பொலிசார் மற்றும் அப்பகுதிக்குரிய கிராமஅலுவலரையும் அழைத்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு கொக்கிளாய் பொலிசார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் வருகைதந்தது நிலமைகள் குறித்து ஆராய்ந்தனர். இதன்போது குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரியதற்கு அமைவாக அங்கு இடம்பெற்ற சட்டவிரோத உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 27.02.2026இன்று மாலை 03.00மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்டசெயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குத்தொடுவாய் கிராமமக்கள், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், வனஜீவராசிகள் திணைக்களம், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் ஆகியதரப்பினருடன் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

