குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது
விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் நேற்று (02) தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன.
சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உடல்களைத் தேடி, களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் கடந்த மார்ச் 30, 2026 அன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கையில் தற்செயலாக எலும்புகள் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு பாரிய புதைகுழி இருப்பதாகக் கருதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும்.
மார்ச் 30 முதல் ஏப்ரல் 01 வரை மூன்று நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பில் சுமார் 6 அடி (இரண்டு மீற்றர்) ஆழத்திற்குத் தோண்டப்பட்டபோது, நிலத்தடி நீர் ஊற்றெடுத்தது. இதனால் அகழ்வைத் தொடர்வதில் பயனில்லை என சட்ட வைத்திய அதிகாரிகள் தீர்மானித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.
இது குறித்துப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாரக் முகஸம் கூறுகையில்,
“9 அடி ஆழம் வரை அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி இருந்தபோதும், நிலத்தடி நீர் காரணமாக சட்ட வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
இதுவரை எவ்வித மனித எச்சங்களும் அல்லது குற்ற ஆதாரங்களும் கண்டெடுக்கப்படவில்லை.”
முதற்கட்ட அகழ்வில் எதுவும் கிடைக்காத போதிலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேலும் சில இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் என முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேகத்திற்குரிய இடங்களை நவீன ஸ்கேன் (Ground Penetrating Radar – GPR) பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது. இச்சோதனைகள் வரவிருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் இடம்பெறும் என சட்டத்தரணி உறுதிப்படுத்தினார்.
இந்த அகழ்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக சுமார் 2.8 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக இலங்கையில் (மன்னார், மாத்தளை, கொழும்பு போன்ற இடங்களில்) கட்டுமானப் பணிகளின்போது தற்செயலாக எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட பின்னரே அகழ்வுகள் நடக்கும். ஆனால், குருக்கள்மடம் விவகாரத்தில் ஆதாரங்களை எதிர்நோக்கி அரசாங்கச் செலவில் நடத்தப்படும் முதல் அகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

