படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கிய அதே இராணுவத்திடம் எரிபொருளை நிரப்ப முடியாது;
இராணுவத்தின் படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கிய விவகாரங்களுக்காக நீதிகோரும் எம்மால், அதே இராணுவத்திடம் எரிபொருளை நிரப்ப முடியாது; நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் எம்.பி கடிதம்
இறுதிப் போர் காலப்பகுதியில் இராணுவப் பொறிமுறைக்குள் நம்பி ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பத்து ஆண்டுகளைக் கடந்து தேடிக்கொண்டும், இறுதிப்போரில் இதே இராணுவக்கட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான நீதிக்காகவும் நீதிக்கான சர்வதேச தலையீட்டுக்காகவும் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் தம்மால், இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் எரிபொருளை நிரப்ப முடியாதெனவும், மாற்று ஏற்பாட்டச் செய்யுமாறும் வலியுறுத்தி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு 22.03.2026இன்று கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் நிருவகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும் ஏற்பாடு குறித்து அண்மையில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகம் ஊடாக வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு தனது மறுப்பைத் தெரிவித்தே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இவ்வாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் “எரிபொருள் விநியோகத்தில் இராணுவத்தலையீட்டை மறுத்தல் மற்றும் சனநாயக – மாவட்ட மட்ட மாற்று ஏற்பாட்டுக்கான கோரிக்கை தொடர்பானது” எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் நிருவகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும் ஏற்பாடு குறித்து அண்மையில் தங்கள் அலுவலகம் ஊடாக வழங்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் எமது மறுப்பை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.
எரிபொருள் விநியோகம் போன்ற அத்தியாவசிய மக்கள் மயப்பட்ட சேவைகளை இராணுவத் தலையீட்டின் ஊடாக பெற்றுக்கொள்ளும் மேற்படி முறைமை, நிருவாக வசதிப்படுத்தலின் பொருட்டு தங்களுக்கு பொருத்தமாக அமைந்தாலும் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சார்பாளர்களாக எங்களின் இயல்பொழுங்கை இது பாதிக்கும் வகையில் அமைகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் சார்பாளராக, எமது மக்களோடு சேர்ந்து நாமும் இதே இராணுவப் பொறிமுறைக்குள் நம்பி ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை பத்து ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
இறுதிப்போரில் இதே இராணுவக்கட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான நீதிக்காகவும் நீதிக்கான சர்வதேச தலையீட்டுக்காகவும் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழலில், அதே இராணுவத் தலையீட்டின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் வழங்கல் முறை எங்களின் இயல்பிருப்புக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் முரணாக அமைகின்றது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தை தளமாகக் கொண்டு செயற்படும் எமக்கு, வவுனியாவுக்குச் சென்று எரிபொருள் பெற்றுக்கொண்டு மீள்வது நடைமுறையில் சாத்தியமற்றதுடன் காலத்தையும் எரிபொருளையும் தேவையற்ற வகையில் வீணாக்குவதாக அமைகிறது.
எனவே மேற்கண்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு சனநாயக நிருவாகத்தின் கீழ் மாற்று வழிமுறையொன்றின் ஊடாக எமக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குமாறு பணிவுடனும் உறுதியுடனும் தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
இதற்காக, பின்வரும் முன்மொழிவுகளை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.
1. பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைமுறையிலுள்ள விரைவுக்குறி முறைமையின் மூலம் (QR Code) பாராளுமன்ற உறுப்பினர்களாக எமக்குரிய ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள அனுமதித்தல்.
2. முல்லைத்தீவு உட்பட உறுப்பினர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்குள்ளேயே எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை உறுதி செய்தல்
3. இராணுவத் தலையீடு அற்ற வகையில் இலங்கை போக்குவரத்துச் சபை அல்லது பொருத்தமான வேறு அரச நிறுவனங்கள் ஊடாக விநியோகத்தை மேற்கொள்ளல்.
மேற்கண்ட நடவடிக்கைகள் நடைமுறையில் சாத்தியமாவதுடன் பல்வேறு சமூகங்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் அமையும் என நம்புகிறேன் – என குறித்த தடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

