அருச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டு
வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் பெரியவிளான் பகுதியில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டப்பட்டது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது பெரியவிளான் வட்டார உறுப்பினரான எட்வேட் மரியவாசினி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பெரியவிளானில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து பாம்புகள் வெளியே வந்து அருகில் இருக்கின்ற மக்களின் குடிமனைகளுக்குள் செல்கின்றது. இதனால் மக்கள் தினம்தினம் அச்சத்தில் வாழ்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஆறு ஏழு பாம்புகள் அங்கிருந்து வெளி வருகின்றன. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தவிசாளர் க.ஜெசீதன்,
பாதீனியம் உள்ள எத்தனை காணிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, யாழ். சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரனின் கழுத்தை நெரிப்பதுபோல் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால் ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி கண்ணே என்பது போல செயற்படுகின்றார்.
உண்மையிலேயே இது முன்னுதாரணத்துக்கு பிழையான ஒரு விடயம். பாராளுமன்றம் என்றால் இதுவரை என்ன என்று மக்களுக்கு தெரியாது என்றும், தான்தான் அதனை வெளிப்படுத்தியதாக மார்பு தட்டி புளுகுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவர்.
இவ்வாறு இருக்கையில் மக்களுக்கு இடையூறாக காணியை வைத்திருப்பது தவறான விடயம். அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக விடப்போவதில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை அவரது காணிக்கான சிவப்பு அறிவித்தலை காட்சிப்படுத்தப்போகின்றோம் என்றார்.

