கதிரியக்க தொழில்நுட்ப வியலாளர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
நேற்றையதினம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரச்சினை தொடர்பில் நேற்றையதினம் இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் நபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல் தொடர்பில் ஏற்கனவே உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ஒரு வார காலத்திற்குள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் கருத்தை மேற்கோள்காட்டி, சுகாதார அமைச்சின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் உடனடி விசாரணையை ஆரம்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று நள்ளிரவு கூடிய கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் நிறைவேற்று குழு, பணிப்புறக்கணிப்பை 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தவும், உறுதியளிக்கப்பட்ட காலத்தில் இணக்கப்பாடுகள் நிறைவேற்றாப்படாவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் அனைத்து சேவைகளையும் நோயாளர்கள் வழமை போன்று பெற்றுக்கொள்ள முடியும்.

