தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண மோசடி குற்றங்க ளுக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணை

மன்னாரில் பண மோசடி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை நேற்று பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணையில் செல்ல மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது.

தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுள்ள தங்க நகைகள் வாங்கியுள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர், சட்டவிரோத நிதியை பயன்படுத்தி வாங்கியதாகக் கருதப்படும் இரண்டு வீடுகள் மற்றும் கார் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சொத்துக்களை முடக்குவதற்கான நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டது. மேலும் அந்த உத்தரவுகளை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க நீட்டிப்புகள் கோரப்பட்டுள்ளன.

சந்தேக நபரின்  மாமியாரான குறித்த பெண் பல நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து, பின்னர் மன்னார் பகுதியிலுள்ள பல நகைக் கடைகளுக்கு அவற்றை விற்றுள்ளார் என்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட தங்க நகைகளை, அவற்றின் தோற்றத்தை அறிந்திருந்தே அடகு வைத்து விற்றதன் மூலம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக,  குறித்த பெண் நேற்றுமுன்தினம் மன்னாரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபரான மன்னாரைச் சேர்ந்த 66 வயதுடைய குறித்த பெண்  சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment