தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடு . நீதிமன்றை நாடவுள்ள ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில்  ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சேவையின் தேவை இடமாற்றம் என்ற பெயரில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி வடமாகாண கல்வி திணைக்களத்தால், முன்னெடுக்கப்படும் சட்டவிரோத இடமாற்ற செயற்பாடுகளுக்கு துணைபோகும் வகையில் வடமாகாண ஆளுநர் செயற்படுகிறார்.

இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆணைக்குழுவுக்கும் சட்ட ஏற்பாடுகள் குறித்து முறையிட்டிருந்தும், சட்ட முரண் குறித்த விடயங்களுக்கு பதிலளிக்காமல் மழுப்பலான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது என்பது வடமாகாண ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

இன்றைய ஆளுநர் முன்னர் அரச அதிபராக இருந்துபோது, தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் அநீதியானது என்று கூறியே வடமாகாண மக்களின்  அனுதாபத்தை பெற்று கடைசியில் அந்த அனுதாபத்தின் விளைவாகவே வடமாகாண ஆளுநராகவும் செயற்படுகிறார்.

ஆனால் தற்போது,  பலநூறு ஆசிரியர்கள் வடமாகாண கல்வி திணைக்களத்தின்  ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதற்கு பிரதான நபராக ஆளுநரே செயற்படுகிறார்.

கடந்தகால அரசாங்கங்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களோடு இணைந்து போராடிய ஜே.வி.பி தொழிற்சங்கம் இன்று  வடமாகாணத்தில் ஆசிரியர்களை  அடக்குமுறைக்குள் கொண்டு செல்ல உடந்தையாக செயற்படுகிறது.

சேவையின் தேவை இடமாற்றம் என்பது நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போதிய சட்ட ஏற்பாடுகள் உள்ள நிலையில்,  ஜே.வி.பி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், அரசாங்கத்தின் பிரதியமைச்சராகவும் உள்ள மகிந்த ஜெயசிங்கவும், உபதலைவராகவும் பிரதியமைச்சராகவும் உள்ள பிரதீப்பும் தங்கள் தொழிற்சங்க  இடமாற்ற சபை உரிமை பறிக்கப்பட்ட விடயத்தை கூட தட்டிக்கேட்க முடியவில்லை என்றால்,  இந்த முறையற்ற செயல்பாடுகள் அரசாங்கத்தின் முழுமையான  தலையீட்டுடன் தான் நடைபெறுகிறது என்பதே வெளிப்படுகிறது .

இந்த ஆபத்துக்களை வடமாகாண கல்வி சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.  இந்த அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில்  ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம். என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Comment