தனியார் பேருந்து சேவைக்கு 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தனியார் பேருந்து சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக வாராந்த அடிப்படையில் 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் (Kilometers) அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த நடைமுறை முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை, தனியார் பேருந்துகள் தமக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) டிப்போக்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவுக்குப் பதில் அளித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, டிப்போக்கள் ஊடாக மாத்திரம் எரிபொருள் வழங்கும் நடைமுறை பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என எச்சரித்துள்ளார்.
நாட்டில் உள்ள 13,000 தனியார் பேருந்துகளில், டிப்போக்களின் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் காரணமாக 6,500 பேருந்துகளை மாத்திரமே இயக்க முடியும்.
டிப்போக்கள் மாலை 5 மணிக்கே மூடப்படுவதால், இரவு நேரங்களில் எரிபொருள் பெற முடிவதில்லை. இது அடுத்த நாள் சேவையைப் பாதிக்கும்.
பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிப்போக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை, இதனால் நீண்ட வரிசைகள் உருவாகும்.
“உலகளாவிய நெருக்கடியை நாம் உணர்ந்துள்ளோம். ஆனால், சாதாரண ஏழை மக்கள் பொதுப் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். எனவே, தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்கு விசேட முன்னுரிமை வழங்காவிட்டால், நாடு பாரிய போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகும்” என கெமுனு விஜேரத்ன மேலும் வலியுறுத்தினார்.
QR நடைமுறை அமுலுக்கு வரும் முன்னர் இதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்பதே பேருந்து உரிமையாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

