சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வன்முறை கும்பலால் வீடு, தீக்கிரை.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், வீடொன்றின் மீது பெற்ரோல் ஊற்றித் தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

பூந்தோட்டம் பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வருபவர்களுக்கும், வெளியில் இருந்து வந்த வன்முறைக் கும்பல் ஒன்றுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு பாரிய மோதலாக மாறியுள்ளது.

வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் வந்த அந்தக் கும்பல், இளைஞர்களைத் தாக்கும் நோக்குடன் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது.

இதையடுத்து, அந்த இளைஞர்கள் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல், வீட்டின் ஜன்னல்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், கதவின் வழியாகப் பெற்ரோல் ஊற்றித் தீயிட்டுள்ளனர்.

வீட்டிற்குள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருந்த நிலையில், அவர்கள் கதறி அழுது தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளனர்.

இருப்பினும், வன்முறையாளர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தீவைத்துக் கொழுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிற்குள் தீ பரவத் தொடங்கிய நிலையில், கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment