செய்திகள் தாயகச் செய்தி 

தமிழரசுக் கட்சியின் முடிவுகள் தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள் தீர்மானங்களை பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரித்துள்ளார்.

கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அவர் அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால் மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது.

Leave a Comment