குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி
குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; பாலத்தை அமைக்க நிதிஒதுக்கீடுசெய்யப்படும் – பிரதமசெயலாளர் தனுஜா முருகேசன் பதில்
வவுனியாவடக்கு பாரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா வடக்கு மாவட்டசெயலக மாநாட்டுமண்டபத்தில் 10.02.2026இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விளக்கங்கோரியிருந்தார்.
அந்தவகையில் 19மீற்றர் நீளமான குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாள 80மில்லியன்ரூபா அளவில் நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபாவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் பதில் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் மிகவும் பின்தங்கிய இடத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் சீரின்றிக் காணப்படுவதால் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும், தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் குடமுருட்டி பாலத்தை அமைப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபே்தும் அந்தப்பாலத்தை அமைப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். எனவே குறித்த குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கோரிக்கை தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.
இதனையடுத்து வடமாகாண பிரதமசெயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாண்டிற்கான மாகாணக்குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த குடமுருட்டிப் பாலத்தினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
குறித்த குடமுருட்டிப்பாலத்தினை அமைப்பதற்கு முன்வந்தமைக்காக வடமாகாண பிரதமசெயலாளருக்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த பாலத்தின் நிர்மாணம் தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளராலும் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

