வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிர்மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 46) யாழ். சிறைச்சாலையில் குளியல் பகுதியில் உயிர்மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் மேல் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.
அதன்படி அந்த தீர்ப்பை வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த கைதி உயிர்மாய்த்துள்ளார்.
உயிரிழந்த குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் மரணம் தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

